Tuesday, January 31, 2012

யாழ் மக்களின் புன்னகைக்குப் பின்னால்....


யாழ்ப்பாணத்தில் நான் கண்ட காட்சி மனதை உருக்கும் விதத்தில் இருந்தது. எல்லோர் முகத்திலும் புன்னகை இருந்தாலும், அவர்களது புன்னகைக்குப் பின் சொல்ல முடியாத ஏதோ ஒரு துன்பரேகை இழையோடுவதை கண்டுணர்ந்தேன். இலங்கையில் நடக்கக் கூடாத சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. இலங்கைத்தமிழ் மக்கள் ஒரு ஜனநாயக நாட்டில், மதிப்புடனும், சுயமரியாதையுடனும் வாழ தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுக்க என்னுடைய இலங்கைப் பயணமானது ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நம்புகிறேன். 13 பிளஸ் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளேன்.
 
இவ்வாறு இந்திய முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், தனது அமைதிப்பயணம் குறித்து தமிழக நாளேடு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
தோல்வியில்லாமல் வெற்றியில்லை. கண்ணீர் எப்போதும் கரிப்பாகவே இருக்கும். ஆனாலும், ஓரு சில சமயங்களில் அது இன்பமாகவும் இருக்கும். அந்த இன்பம் பெறவேண்டுமானால் பல புயல்களைக் கடக்கும் மன உறுதியைப் பெறவேண்டும்.கடந்த 21ஆம் திகதி இரவு இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தபோது இரண்டு முக்கியமான விடயங்களைப் பற்றி அவரிடம் பேசினேன்.
 
அதாவது, மும்மொழித் திட்டத்தை முழுமையாக இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் செயற்படுத்துவதில் இந்தியாவின் ஆதரவைத் தெரிவித்து விட்டு, இலங்கையின் 13 ஆவது அரசமைப்புத் திருத்த சட்டத்தை மேம்படுத்தி, 13 பிளஸ் என்ற அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை விரைவில் இலங்கையில் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தினேன்.
 
இலங்கையில் உள்ள எல்லா மாகாணங்களையும், அதாவது, வடக்குக் கிழக்கு, தெற்கு, மத்திய, மேல் மாகாணங்களையும் மற்ற மாகாணங்களையும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயநிர்ணய அதிகாரம் கொண்ட மாகாணங்களாக மாற்றியமைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும்  வலியுறுத்தினேன் என்றார்.

நன்றி உதயன்

இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை – மீண்டும் குத்துக்கரணம் அடித்தார் மகிந்த


13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்போவதாக இந்தியாவுக்கு வாக்குறுதி எதையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, அண்மையில் கொழும்பு வந்து சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதாக மகிந்த ராஜபக்ச தம்மிடம் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறியிருந்தார். 

அந்தக் கருத்தையே சிறிலங்கா அதிபர் நேற்று நிராகரித்துள்ளார்.   இந்தியாவுக்கு தாம் இத்தகைய வாக்குறுதியைக் கொடுக்கவில்லை என்றும், இந்தியாவுடன் இதுபற்றிக் கலந்துரையாடல் மட்டுமே நடத்தியுள்ளதாகவும், நேற்று அலரி மாளிகையில் ஊடக ஆசிரியர்களைச் சந்தித்த போது கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ் ஊடகங்களையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.  அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபர் - " நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால், அந்தக் குழு எடுக்கும் தீர்மானத்திற்கு தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது. 

விடுதலைப் புலிகள் நிபந்தனைகளை முன்வைத்தே முன்பு அரசாங்கத் தரப்பினருடன் பேச்சுக்களில் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதே போக்கில் நிபந்தனைகளை முன்வைக்காமல், அரசாங்கத் தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும். 

சம்பிக்க ரணவக்கவின் ஹெல உறுமய கட்சியும், விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியும் 13 திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு குறித்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு குறித்தும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் இவ்விரு கட்சிகளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பது மேயாகும். அதற்கு நானும் என்னுடைய அரசாங்கமும் ஒரு போதுமே இடமளிக்கப் போவதில்லை.  தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும், பிரிவினைவாதக் கொள்கையை பின்னணியில் வைத்துக் கொண்டே காவல்துறை அதிகாரம், காணி அதிகாரம் ஆகிய அவசியம் என்று கேட்டு வருகின்ற போதிலும, வட பகுதியில் உள்ள மக்களும், இளைஞர்களும் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை. அவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி வசதி ஆகியனவே தேவையென்று எங்களிடம் கேட்கிறார்கள். 

இந்நாட்டில் அமைதியும், சமாதானமும் நிலைத்திருக்க வேண்டும். 30 ஆண்டு காலம் யுத்தத்தை நடத்தி ஏற்பட்ட மனித மற்றும் சொத்துக்களின் அழிவு போதாதா? நாம் தொடர்ந்தும் யுத்தம் செய்து கொண்டிருக்க முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஒவ்வொரு சந்திப்பிலும் ஏதாவது ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்து, பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்கிறது. அவர்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவம் வகித்து, தங்கள் யோசனைகளை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்த ஏனைய உறுப்பினர்களின் ஆதரவை திரட்டுவதுதான் நல்லது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பும், விடுதலைப் புலிகளைப் போன்று பேச்சு மேசையில் இருந்து அடிக்கடி தன்னிச்சையாக வெளியேறுகின்றனர். இந்தத் தடவையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுக்களில் இருந்து வெளியேறிய போதும், நாம் எமது நல்லெண்ணத்தை காட்டும் முகமாக மீண்டும் பேச்சுக்கு அழைத்தோம். அவர்களை எப்படியாவது நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தங்கள் பிரதிநிதிகளை முன்மொழியச் செய்வதற்கு இணங்க வைப்பதற்காகவே இந்த பேச்சுக்களை நடத்துகிறோம். 

செனட் சபை உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் இறுதித் தீர்வை எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடமே இருக்கின்றது. நாடாளுமன்ற தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்தால் செனட் சபை ஒன்றை ஏற்படுத்துவது சாத்தியமாகும். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் நாங்கள் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக பணிகளை செய்கிறோம். 

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் அமைச்சரவை குழுவொன்றை அமைத்து, இந்த யோசனைகளை எவ்விதம் சுமுகமாக நிறைவேற்றுவது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது. ஆணைக்குழு தெரிவித்த சில குற்றமிழைப்பு சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கு தேவையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருக்கின்றனவா என்பதை அவதானிக்கும் பொறுப்பு இப்போது சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சட்டமா அதிபர் திணைக்களம் அவற்றை நன்கு ஆராய்ந்து சம்பந்ப்பட்டவர்களை தண்டிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கும். 

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிறைவேற்ற தவறிவருவதாக சில வெளிநாட்டு சக்திகள் எங்களை கண்டிக்கின்றன. அமெரிக்க இராணுவ வீரர் ஒருவர் 24பேரை கொலை செய்த வழக்கு 7 வருடங்களுக்கு பின்னர் தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைப்பற்றி யாரும் பெரிதுபடுத்தி பேசுகிறார்களா? 

அரசாங்கம் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அசமந்தப் போக்கை கடைப்பிடிக்கின்றது என்று சில ஊடகங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் சரியல்ல. சகல கட்சிகளும் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சேர்ந்து கொண்டு, பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம். 

13 திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வு காண்பதை நாம் எதிர்க்கவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவிடம் இந்தத் தடவை கூறியதை ஏற்கனவே புதுடில்லியில் நடந்த அரச தலைவர்கள் சந்திப்பிலும் தெரிவித்திருந்தேன். இது ஒரு தனிமனிதன் சம்பந்தப்பட்ட பிரச்சினையல்ல. இந்நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரச்சினைக்கு விடை காணும் விடயத்தில் பங்காளிகளாக இருக்க வேண்டும். அதனால் தான் அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து, அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு நல்ல முடிவை எடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது. 

13 திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு பற்றிய எனது நிலைப்பாட்டை இங்கு பகிரங்கப்படுத்தினால் அதை வைத்து ஊடகங்கள் எனக்கு எதிராக எழுதி நாட்டில் பிரச்சினையை உருவாக்க எத்தனிக்கும். நாட்டின் அதிபராக இருந்தாலும் இது மக்களுடைய பிரச்சினையாக இருந்து வருவதனால், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒரு ஒருமனதான முடிவை எடுப்பது அவசியம். நாடாளுமன்றத் தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஆதரித்து நடைமுறைப்படுத்துவேன். இது விடயத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும். மக்களின் அங்கீகாரத்துடனேயே இந்தத் தீர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் விரும்பாத ஒரு தீர்வை ஏற்படுத்தி, நாம் அதனை நடைமுறைப்படுத்துவது முடியாத காரியம். 

நிச்சயமாக மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை கொடுக்க முடியாது. அப்படி காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால் எனக்கு பெந்தர பாலத்தைக் கடந்து தென்னிலங்கைக்கு போக முடியாத சூழ்நிலை உருவாகும். காணி விடயத்தில் பல்லாண்டு காலமாக நடைமுறையில் உள்ள சட்டங்களே தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றது. அது பிரச்சினைக் குரிய விடயமல்ல. அரசாங்கத்தின் தலைவன் என்ற முறையில் அரசாங்கத்தினால் நடை முறைப்படுத்தக் கூடிய யதார்த்தபூர்வமான விடயங்களையே நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியுமே ஒழிய நடைமுறைப்படுத்த முடியாத சிக்கலான காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பற்றிய யோசனைகளை ஏற்றுக் கொள்வது சாத்தியமல்ல. 

ஊடகவியலாளர்கள் அநாவசியமான விடயங்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். உள்நாட்டு பிரச்சினையை அனைத்துலக மயப்படுத்தி தேசத்திற்கு அபகீர்த்தியையும், பிரச்சினைகளை உண்டு பண்ணுவதையும் ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம், 13 வது திருத்துக்கு அப்பாற்பட்ட திருத்தம் போன்ற விடயங்களில் ஊடகவியலாளர்கள் நடுநிலையில் இருந்து பக்கச்சார்பற்ற முறையில் சரி பிழைகளை புரிந்து கொண்டு தங்கள் ஊடகங்களில் கருத்துக்களை எழுதினால் இனப்பிரச்சினைக்கு நல்ல தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும். சில தமிழ் நாளிதழ்கள் இனவாதக் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. ஊடகங்கள் தங்கள் கடமையை நடு நிலையுடன் சிந்தித்து செயற்படுத்துவது அவசியம். சிலர் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக தவறான அரச எதிர்ப்பு பரப்புரைகளை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் செய்து வருகின்றனர். இது உண்மையில் நாட்டுக்கே தீங்கிழைக்கிறது. தேர்தல் காலத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான பரப்புரைகளை செய்து அதில் வெற்றி காணலாம். அதை விடுத்து இப்போது நாட்டுக்கு தீங்கிழைப்பது நல்லதல்ல." என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நன்றி புதினப்பலகை 




வடுக்களைச் சுமந்து பரிதவிக்கும் மூத்தகுடிகள்


இலங்கையின் மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருவதை தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகள் வாயிலாக அறிய முடிகிறது. அதேசமயம் முதியவர்களில் அதிகளவு எண்ணிக்கையானோர் கவலை, குழப்பம், ஆவல் என்ற மன ஒழுங்கின்மைக்கு உள்ளாகியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இலங்கையில் வட, கிழக்கைப் பொறுத்தவரை முதியவர்கள் எதிர்நோக்கும் இந்த உளவியல் பாதிப்புகள் வயது முதிர்ந்தவுடன் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளுக்கும் அப்பாற்பட்டவையென்பதை நேரில் காணக்கூடியதாக இருக்கிறது. இதற்கு பிரதான காரணம் நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தமாகும். போரினால் குடும்ப உறுப்பினர்களை இழந்தோ அல்லது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு தனிமையுடன் தவித்துக்கொண்டோ அல்லது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த துன்பப்பட்டு மீண்டும் இருப்பிடங்களுக்கு திரும்பியும் அடிப்படை வசதிகளின்றி அன்றாட வாழ்க்கையை முன்னெடுக்க முடியாமல் தவித்துக்கொண்டே அதிகளவான முதியவர்கள் இருக்கின்றனர்.

சமூக ரீதியான குழப்பங்கள், பயத்தால் ஏற்பட்டுள்ள குழப்பநிலை, கொள்கைப் பிடிவாத நிர்ப்பந்தத்தால் ஏற்படும் குழப்பங்கள், தேவையற்ற பயப்பிராந்திகள் மற்றும் பல்வேறு விதப்பட்ட கவலைகள் முதியவர்களை நலிந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இது வயது மூப்பினால் ஏற்படும் இயல்பான விடயம் தானே என்று முதியவர்கள் பலர் இந்த ஒழுங்கின்மை தொடர்பாக அலட்சியப்படுத்திவிட்டு மனக்கவலைகள், குழப்பங்கள், கடும் ஆவல் தொடர்பானவற்றுக்கு சிகிச்சையை நாடுவதில்லை. பெரும்பாலான முதியவர்களுக்கு இதற்கான வசதி வாய்ப்புகளோ, வலுவூட்டல் வசதிகளோ சிறிதளவும் கிடைப்பதில்லை.

ஆனால், இந்த மனக்கவலைகள், குழப்பங்கள் சிறப்பான வாழ்க்கையை மோசமாகப் பாதிக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது வித்தியாசமான உலகத்திற்கு இந்த முதியவர்களைக் கொண்டு செல்லும் அதேசமயம் இங்கு முக்கியமான விடயமாக காணப்படுவது முதியவர்களுக்கு ஏற்படும் இந்தக் குழப்பம், கவலை, ஆவல் என்பன வயது மூப்படைவதாலா அல்லது கவலை, குழப்பம், ஆவல் என்ற ஒழுங்கீனங்களால் ஏற்பட்ட ஒழுங்கீனமா என்பதை அடையாளம் கண்டுகொள்வதாகும். இதற்கு தகைமை பெற்ற மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள், முதியோர் மருத்துவப் பராமரிப்பியல் நிபுணர்கள் நிச்சயமாக உதவ முடியும்.

முதியோருக்கு ஏற்படும் ஆவல், குழப்ப ஒழுங்கின்மைக்கு பலர் குடும்ப மருத்துவரை அல்லது ஆஸ்பத்திரிகளில் உள்ள சாதாரண மருத்துவர்களை நாடுவது வழமை. இங்கு பொருளாதாரமே முக்கிய காரணியாக உள்ளது. பொருத்தமில்லாத மருத்துகளைப் பெற்றுக் கொண்டு சிலருக்கு நிலமை மேலும் மோசமடைவதும் உண்டு. முதியவர்கள் சிலர் அளவுக்கு அதிகமாக இந்த அபரீதமான கவலைகள், குழப்பங்களுக்கு மருந்துகளை எடுப்பதால் அதற்கு அடிமைகளாகிவிடுவதும் காணப்படுகிறது. அதீத ஆவல் குழப்பமானது வயிற்றுப் பொருமல், அதிகளவாக வியர்த்துக்கொட்டுதல், தோலில் கொப்புளங்கள், சிவப்பு படைகள், கை, கால் நடுக்கம், மூச்சிழைத்தல், உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, சிறிய விடயங்கள் குறித்தும் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருத்தல் போன்றவற்றைத் தோற்றுவிக்கிறது. தொடர்ந்து நீடித்திருக்கம் கவலைகள் முதியவர்கள் மத்தியில் அதீக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இடம், பொருள், விடயம் தொடர்பாக ஒருவர் அதிகளவு அச்சம் கொண்டிருப்பது பயப்பிராந்தி நோயால் அவர் பீடிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும். அதீத ஆவல், பயம் என்பன மார்பு வலி, மூச்சுத்திணறல், மூக்கோட்டம் போன்றவற்றின் மூலம் வெளிப்படுகின்றது. இதனால், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று அண்மையில் இந்தியாவில் பத்மபூஷணம் விருது பெற்ற டாக்டர் வி.எஸ்.நடராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனக்குழப்ப வியாதியானது மன அழுத்தத்துடன் உடல் ரீதியான பாதிப்புக்கும் இட்டுச் செல்கிறது. முதியவர்கள் தத்தமது வாழ்க்கைத் துணையை இழக்கும் போது அல்லது பிள்ளைகள் பிரிந்து சென்றுவிடும்போது அதிகளவு மனக் குழப்பத்துக்கு உள்ளாகின்றனர்.  இவை யாவற்றுக்கும் மேலாக “இறப்பு’ பற்றிய சிந்தனைகள் முதியவர்கள் மத்தியில் அதிகளவுக்கு காணப்படுவது பற்றி புரிந்துகொள்ளுதல் இங்கு அவசியமானதாகும். முடிவு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற சிந்தனை சதா காலமும் அவர்களின் மனதைக் குடைந்து கொண்டிருக்கும்  என்பது விளங்கிக் கொள்ள வேண்டிய விடயமாகும். மேற்குலகைப் பொறுத்த வரை மரண பயணம் சிரேஷ்ட பிரஜைகளிடம் சாதாரணமாக காணப்படுகிறது. ஆனால், இலங்கை போன்ற கீழைத் தேசங்களில் சுதந்திரமான முறையில் மரணிக்க வேண்டுமென்ற விருப்பமே அதிகளவில் முதியவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

முதியவர்கள் மத்தியில் காணப்படும் மனக்குழப்பத்தை அகற்றுவதற்கு சமூகத் தொண்டர் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியமானதாகக் காணப்படுகிறது. அத்துடன் குடும்பத்திலுள்ள இளைய சமூகம் முதியவர்கள் பற்றிய அக்கறையை அதிகளவில் வெளிப்படுத்த வேண்டும். தனிமையாக இருக்கும் இந்த மூத்தவர்கள் அசட்டையீனத்தால் போஷாக்கான உணவு வகைகளைப் புறக்கணித்துவிடுவதுண்டு. உண்மையிலேயே முதியவர்களுக்கு சிறப்பான போஷாக்கு தேவைப்படுகிறது. மேலும் பலர் குறைவாகவே வழங்குகின்றனர். அதிகாலையில் விழித்தெழுந்துவிடுவதால் மன அமைதியீனம் ஏற்பட அது வழிவகுக்கிறது. சிறப்பான உறக்கம் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. சிறப்பான தூக்கம், தியானம், சிறியளவிலான பயிற்சிகள் என்பன பாரியளவுக்கு மனதை இலகுவாக்கும். அத்துடன் செய்வதற்கு எந்த வேலையும் இல்லையென விட்டுவிடாமல்  எதனையாவது செய்துகொண்டிருப்பதன் மூலம் மனதை இலகுவாக்கிக் கொள்ள முடியும். 

அத்துடன் சமூகத்துக்கு நான் பயனுள்ளவனாக இருக்கிறேன் என்ற உணர்வை ஏற்படுத்த குறைந்தது வாரத்தில் ஒரு தடவையாவது சமூக மற்றும் மனித நேயப் பணியில் ஈடுபடுத்திக் கொள்வதும் மனக் குழப்பம், கவலை, ஆவல் என்ற பிரச்சினைகளிலிருந்து முதியவர்கள் விடுபட முடியும். இந்த விடயம் நாட்டிலுள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கு பொதுவானதாக இருக்கும் அதேசமயம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வட, கிழக்கிலுள்ள சிரேஷ்ட பிரஜைகளைப் பொறுத்தவரை அவர்களின் உள ரீதியான பிரச்சினைகள் வேறுபட்டவையாகும். சமூகக் கட்டமைப்புகள் சிதறிச் சின்னாபின்னமாகியிருக்கும் நிலையில் அங்குள்ள முதியவர்களின் மனக் குழப்பங்கள், கவலைகள், வேறுபட்ட தன்மையைக் கொண்டவையும் அடிப்படை உரிமைகள் பற்றியவையாகவும் இருக்கின்ற நிலையில் அங்குள்ள சிரேஷ்ட பிரஜைகளின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு பரிகாரம் காணப்பட வேண்டும்.

நன்றி தினக்குரல் 

பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் தீராத கோபம் யாருக்கென்ன இலாபம்?


ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வுக்கு தமிழ் மக்கள் மீதான பகைமை இன்னமும் தீரவில்லை என்பதை உணரமுடிகின்றது. விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டது, அந்தப் போரால் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தது, அவர்கள் இன்னமும் இழப்புகளில் இருந்து மீட்சிபெற முடியாமல் தவிப்பது, இப்படியான இடுங்கண்களை தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற வேளையிலும் அவர்கள் மீதான ஆத்திரமும் கோபமும் ஜனாதிபதியிடம் தணியவில்லை என்பதை உணர முடிகின்றது.

உண்மையில் வன்னியில் நடந்தது போன்ற போரை வேறொருவர் நடத்தியிருப்பாராயின் அந்தப் போரில் வன்னியில் நடந்த மிகக் கொடூரமான மனிதப் பேரழிவுகள் ஏற்பட்டிருக்குமாயின் போரை நடத்தியவர், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என எண்ணியிருப்பார். அதுவே மனித இயல்பும் கூட. ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷவோ மேலும் மேலும் தமிழ் மக்கள் மீது கடும் கோபம் அடைபவராக இருக்கின்றார். இதனை நினைக்கும்போது ‘பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம். தீராத கோபம் யாருக்கென்ன இலாபம்’ என்ற பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன. இந்த நாட்டின் ஜனாதிபதி என்பவர் எல்லா மக்களையும் சம கண் கொண்டு பார்ப்பவராக இருக்க வேண்டும்.

அவரிடம் இனம், மதம், மொழி என்ற பிரி பாடல் இம்மியும் இருத்தல் ஆகாது. ஆனால், துரதிஷ்டவசமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் இன மத மொழி அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கின்றனர். இதன் காரணமாக இந்த நாட்டில் இனத்துவ ஒற்றுமை என்பது விரிசல் அடைவதாகவே இருக்கின்றது. இவ்வாறானதொரு பகைமை உணர்வுக்கு விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல்கள் காரணமா? அல்லது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவை ஆதரித்து காரணமா? என்ற வாதப் பிரதிவாதங்களின் மத்தியில், இந்த நாட்டில் சிங்கள மக்கள் ஆளப் பிறந்தவர்கள், தமிழ் மக்கள் வந்தேறு குடிகள். எனவே உண்மையான பெளத்த சிங்களவர் ஒருபோதும் தமிழ் மக்களை உரிமையுடையவர்களாகப் பார்க்க மாட்டார்கள்.அவர்களுக்கு உரிமை கொடுப்பதையும் விரும்ப மாட்டார்கள்.

மேலும் இலங்கையின் ஆட்சியாளர் சிங்கள மக்களின் முழுமையான ஆதரவைப் பெறவேண்டுமாக இருந்தால், தமிழ் மக்களை அதிஉச்ச பட்சமாக நசுக்குபவராக இருக்க வேண்டும் என்ற கோட்பாடும் நடைமுறையில் உண்டு. எதுவாயினும் இலங்கை என்ற இந்த நாடு அனைத்து வழியிலும் அபிவிருத்தியடைய வேண்டுமாயின்,எதிர்காலத்தில் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டுமாயின், வன்னிப் போர் போன்று இன்னோர் போர் இடம்பெறாமல் இருக்க வேண்டுமாயின் இலங்கைத் தீவில் இருந்து பேரினவாதப் பேய் துரத்தப்பட வேண்டும். பெளத்த சிங்களப் பேரினவாதப்பேய் ஆட்சியாளர்களிடமும், சிங்கள மக்களிடமும் இருக்குமாயின், கெளதம புத்த பிரான் வந்தாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பது சர்வ நிச்சயம். ஆக, பகையும் தீராத கோபமும் அழிவைத் தருமேயன்றி ஒருபோதும் அவை ஆக்கத்திற்கு உதவுபவை அல்ல என்பது உணர்தற்குரியது.

நன்றி வலம்புரி 

Monday, January 30, 2012

மோசமாக அதிகரித்துவரும் சிறுவர் மீதான வல்லுறவுகள்


நாட்டில் தினமும் 35 பிள்ளைகள் பாலியல் வல்லுறவுக்குட் படுத்தப்படுவதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்திருக்கிறது. பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக நாளாந்தம் பல சம்பவங்கள் பதிவு செய்யப்படும் நிலையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படும் பிள்ளைகளின்   எண்ணிக்கை சராசரி மூன்று என்று பொலிஸ் பேச்சாளர் கூறியிருக்கிறார். பொலிஸ் பதிவுகளுக்கு உட்படாத பாலியல் துஷ்பிரயோகங்களும் அதிகளவில் இருப்பதாக பிள்ளைகள், பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்தப் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய தகவல்கள் அதிகளவுக்கு வெளிவரவில்லை. அதேசமயம் ஊடகங்களும் இந்தச் சமூகச்சீர்கேடு குறித்து அதிகளவுக்கு முன்னுரிமை காட்டியதும் இல்லை. ஆனால் இப்போது சிறுவர், பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், வல்லுறவுகள் குறித்து உடனுக்குடன் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்துவதற்கு தமக்குரிய பங்களிப்பை செய்து வருகின்ற போதிலும் இந்த படுபாதகமானதும் வக்கிரமானதுமான நடவடிக்கைகளை முற்றாக கட்டுப்படுத்தவும்  இதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து பரிகாரம் காணவும் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தவில்லையே என்று தோன்றுகிறது.

நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்திருப்பதே பெண்கள், பிள்ளைகள் மீதான வல்லுறவுகள் அதிகரித்திருப்பதற்கு காரணம் என்று பெண்கள்,  ஊடகங்கள் ஒருங்கிணைப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான சே பாலி கொட்டேகொட சாடியுள்ளதை சம்பந்தப்பட்ட அரச முகவரமைப்புக்கள் கவனத்திற்கொள்ள வேண்டும். சிறு பிள்ளைகள் , பெண்கள் மீதான வல்லுறவுகள், பாலியல் துஷ்பிரயோகங்ளுக்கு போதைவஸ்து பாவனை மதுபாவனை, அதிகரிப்பு என்பனவும் காரணங்களாக  இருக்கின்ற போதிலும் இந்த தார்மீக நெறிப்பிறழ்வுக்கும் வக்கிர உணர்வு அதிகரிப்பிற்கும் மூல காரணமாக இருப்பது சமூக நீதி, சமூக நியதி என்பன பற்றிய போதிய அறிவில்லாமை என்று கூறமுடியும். இந்த நாட்டிலுள்ள சகல பிள்ளைகளும் எமது மகள்மார் எமது சகோதரிகள் என்ற உணர்வை நாட்டிலுள்ள உயர்மட்டத்திலிருந்து தாழ்ந்த மட்டம் வரை கொண்டிருந்தால் சிறு பிள்ளைகள், பெண்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவது இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் அறவே ஏற்படாது.

இங்கு மற்றொரு விடயத்தையும் கவனத்திற்கு எடுக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்த போதிலும் “நல்லிணக்கம்’ என்பது வெறும் கனவாகவே தொடரும் நிலையில் போர்க்காலத்தில் பாலியல் வல்லுறவு, துஷ்பிரயோகம் போன்ற பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்தும் தப்பிவிட்டதுடன் மீண்டும் இந்த ஈனச் செயற்பாட்டை மேற்கொண்டுவிட்டு இலகுவாக தப்பிவிடும் தன்மை காணப்படுகிறது. சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், சமூக நீதி, சமூக ஒழுங்கு, கலாசாரம் கலாசார மரபுரிமை போன்றவை பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் இவற்றை அலட்சியத்துடன் தூக்கிவசீவிட்டு "கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்ற சிந்தனையில் வாழும் சமூக உறுப்பினர்களின் தொகை அதிகரித்து வருவதும் இந்த பாரதூரமான பிரச்சினைக்கு முக்கிய காரணியாக அமைந்திருக்கிறது. இங்கு பெரும் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தும் விடயமாக காணப்படுவது பாதுகாவலர்களாக கருதப்படும் பாட்டன்மார், மாமன்மார் மற்றும் நெருங்கிய உறவினர்களால் சிறு பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் விடயமாகும். இப்போது ஆசிரியர்களும் இந்த வரிசையில் இடம்பிடித்துக்கொண்டிருப்பது அதிகரித்து வருவதாக சேவ் த சில்ரன் அமைப்பின் ஆலோசனைப் பணிப்பாளர் மேனகா கல்யாணரட்ண கூறியுள்ளார். வெளியார்கள் பற்றி முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு எப்போதும் பிள்ளைகளுக்கு நாம் அறிவுரைகூறி வருகின்றோம்.  ஆனால் இப்போது சமூகத்திற்குள்ளேயே ஆசிரியர்கள், தகப்பன்மார், பேரன்மார் இந்தக் குற்றங்களை செய்வோராக இருக்கின்றனர் என்று அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை போன்ற அரச முகவரமைப்புகளும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பலவும் சிறுவர், பெண்கள் உரிமைகள் குறித்தும் பாதிப்புகள் இடம்பெறும் போது கொள்ளவேண்டிய சட்ட ரீதியான வழி முறைகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் இத்தகைய தீய செயல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் கருத்தரங்குகளை நடத்தியும் கையேட்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் கூட்டங்களை நடத்தியும் விழிப்பூட்டல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதேசமயம் அரசும் பல்வேறு சட்டங்களை அறிமுகப்படுத்தி இந்தக் குற்றச் செயல்களை தடுத்துநிறுத்த முயற்சிக்கின்றதென்னவோ உண்மைதான். ஆனால் சட்டத்தின் துவாரங்களினூடாக குற்றவாளிகள் தப்பிப் பிழைப்பதும் சட்டத்தில் சிக்கிடாமல் இருப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிறுவர் துஷ்பிரயோகம் தற்போது அதிகரித்திருப்பதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி முக்கிய காரணம் என்று மனித உரிமைகள் அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாட்டாளர் சிறில்ராஜ் கூறுகிறார். பாலியல் விடயங்களை வெளியிடும் இணையத்தளங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் அந்தத் தளங்களை சென்றடைவதற்கான இதரவழிகள் இருந்து வருகின்றன. அவற்றை தடை செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வீட்டிலும் வீதியிலும் சமூகத்திலும் பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாவிடின் இதற்கான தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்தினுடையதேயாகும். எந்தவித தயவுதாட்சண்யமுமின்றி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்குரிய போதிய சட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இந்த சமூக நெறிப்பிறழ்வுக்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணவேண்டும். யுத்த காலத்தில் எந்தவொரு பாரிய குற்றத்தையும் இழைத்துவிட்டு அதற்கான பொறுப்பையும் வேறு தரப்பினர் மீது சுமத்தி விட்டு சிறப்பு விடுபாட்டு உரிமை பெற்றவர்களாக இருப்போர் பலர் இத்தகைய சமூக சீர்கேடுகளுக்கு முன்னுதாரணங்களாக இருப்பதற்கு எந்த விதத்திலும் இடமளிக்கக்கூடாது. பணபலம், அரசியல் அதிகார பலத்தின் போஷிப்பு என்பனவும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பலவற்றுக்கு பின்னணியில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இந்நிலையில் பாலியல் வல்லுறவு குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்கள் தொடர்பான சந்தேகநபர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளையும் அரசாங்கம் விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். தினமும் 5 பிள்ளைகள் வரை வல்லுறவுக்குட்படுத்தப்படுவது என்பது இங்கு சாதாரண செய்தி அல்ல. சாக்கடைக்குள் சமூகத்தை ஓட்டுமொத்தமாக தள்ளிவிடும் பஞ்சமா பாதகங்களிலும் பாரிய பாதகம்.

நன்றி தினக்குரல் 

காலங்கடந்த ஞானம் - நிறைவேற என்ன செய்ய வேண்டும்


இனப்பிரச்சினைக்கான தீர்வில் சர்வதேச மத்தியஸ்தம் தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானதென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், சர்வதேச மத்தியஸ்தம் தேவையென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலங்கடந்தே உணர்ந்து கொண்டுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் இனப்பிரச்சினை தொடர்பில் அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த் தையை ஆரம்பிக்க இருந்தவேளை, அரசுடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச மத்தியஸ்தம் தேவையென்ற கருத்தை இதே பத்தியில் எழுதியிருந்தோம்.

தேவையாயின் அதனை ஆதாரபூர்வமாகவும் நிரூபிக்க முடியும் என்பதையும் இவ்விடத்தில் கூறித்தான் ஆகவேண்டும். இலங்கை அரசுடன் எந்தத் துணையும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்குச் சென்றமை மகாதவறு. கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாங்கள்தான் என்பதை நிரூபிப்பதை மட்டுமே அது கருத்தில் கொண்டது. சர்வதேச மத்தியஸ்தம் பற்றி தாம் ஏதும் கதைக்கப்போய் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை இழக்க வேண்டியதாகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அவசர அவசரமாக அரசுடன் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்பட்டது.

முழுக்கமுழுக்க பாராளுமன்றக் கதிரை மீது கொண்ட ஆசை காரணமாக கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்தால் இன்று நிலைமை மோசமாகி விட்டது. அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலப் பகுதியில் சர்வதேசத்தின் போக்கு தமிழ் மக்களுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. ஆனால் இப்போது அதன் வலிமை குறைவடைந்து செல்கிறது. இந்நிலையில், அரசுடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச மத்தியஸ்தம் தேவையென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு கிடைக்கக்கூடிய முடிபு சாதகமாக அமைவது சந்தேகத்திற்குரியதே.

பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் இத்த கையதொரு கோரிக்கையை விட்டிருந்தால் அதனை அரசும் சர்வதேச சமூகமும் சாதகமாகப் பரிசீலித்திருக்கும். அத்தகைய சூழமைவில் பேச்சுவார்த்தை ஒரு படிமுறையில் நகர்வதற்கான சாத்தியம் இருந்திருக்கும். ஆனால், கேட்கவேண்டிய நேரத்தில் கேட்கத் தவறியமைக்கு கூட்டமைப்பின் குறுகிய நோக்கமே காரணம் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். எனவே,  இப்போது கூட சர்வதேச மத்தியஸ்தத்தை கேட்கும் கூட்டமைப்பு அதற்காக காத்திரமான அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருக்கும். இதற்கு மேலாக, சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெறுவதும் கட்டாயமானதாகும். இதனைச் செய்யாமல் வெறும் வார்த்தை வடிவில் கோரிக்கை இருக்குமாக இருந்தால், பாவம் தமிழ் மக்கள் என்று கூறுவதை தவிர வேறெதுவும் இருக்காது.

நன்றி வலம்புரி 

Sunday, January 29, 2012

கூட்டமைப்பின் ஆபத்தான அணுகுமுறைகள்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களும், செயற்பாடுகளும் தமிழ்மக்கள் ஆக்கபூர்மான பணிகளில் ஈடுபடுவதனை திசைதிருப்பும் கபடநோக்கம் கொண்ட உத்திகளே ஆகும். கடந்த வாரம் கனடா தமிழ் காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார். அந்த உரையில் அவர் கூறுகின்ற ஒருசில விடயங்கள் தொடர்பாக இந்த பத்தி ஆராய உள்ளது. இதற்கு காரணம் சுமந்திரன் அவர்கள் கூட்டமைப்பில் மிகவும் அனுபவம் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தாலும் கூட, கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இவருக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தினை நோக்கினால் அவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சித் தலைவர்கள் அனைவரையும்   விட கூடுதல் அதிகாரமும் முக்கியத்துவமும் உடைய ஒருவராக கருதப்படுவதாலேயாகும். காரணம் உத்தியோக பூர்வமான அழைப்புக்களின் பெயரில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்ற சந்திப்புக்களில் அவர்களுக்கு இணையாக சுமந்திரன் அவர்களும் கலந்து கொள்வதுண்டு.

அது மட்டுமன்றி வேறு சந்தர்ப்பங்களில் ஏனைய தலைவர்கள் அழைத்துச் செல்லப்படாது சுமந்திரன் அவர்களை  மட்டும் சந்திப்புக்களுக்கு சம்பந்தன் அவர்கள் அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுக் குழுவின் உறுப்பினராகவும் சுமந்திரன் அவர்கள் உள்ளார். அந்த அடிப்படையிலேயே கனடாவில் அவர் ஆற்றிய உரை முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த உரையின் ஆரம்பத்தில் தற்போது தாயகத்திலுள்ள களநிலைவரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். குறித்த உரையில் பல்வேறு கோணங்களில் மக்கள் அனுபவிக்கும் மனிதஉரிமை மீறலகள், துன்பங்கள், துயரங்கள், தாயகத்தில் சிறீலங்கா அரசு புரியும் சிங்கள மயப்படுத்தல், இராணுவமயப்படுத்தல் போன்ற அக்கிரமங்கள் அநியாயங்கள் அனைத்தையும் குறுகிய நேரத்தினுள் சுருக்கமாகவும் ஆனால் மிகத் தெளிவாகவும் விளக்கியுள்ளார்.

மேலும் இவ்விடயங்கள் தொடர்பாக ஏற்கனவே சிறீலங்கா பாராளுமன்றத்தில் 2011 யூலை 7ம் திகதியும், 2011 அக்டோபர் 21 ம் திகதியும் சிறீலங்காவின் வடக்கு கிழக்கு பிரதேசத்தின் நிலவர அறிக்கை என்ற தலையங்கத்தில் இரண்டு அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளார். அவரது இந்த முயற்சி ஏற்கனவே தமிழினத்திற்கு எதிராக தமிழர் தாயகத்தில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் இன அழிப்புச் செயற்பாடுகளை ஆவணப்படுத்துகின்ற வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், மனிதாபிமான அமைப்புக்களும் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழர் தாயகத்தில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் அநியாயங்களை ஆவணப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்டுள்ள விபரங்களை நாம் வரவேற்பதுடன் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அவரது பேச்சின் இரண்டாவது கட்டமாக மேற்சொன்ன பாதிப்புக்கள், அநியாயங்கள் இடைநிறுத்துவது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் உரையாற்றினார். இந்த நடவடிக்கை அவசரமாக எடுக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால், தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயங்கள் உரிய முறையில் இடம்பெறுவதற்கு, அதாவது நடைபெற்றதற்கும் நடைபெறுவதற்கும் மீள்நல்லிணக்கம் அவசியம் என்று கூறுகின்றார். இவற்றிற்கெல்லாம் இனப்பிரச்சினைக்குரிய அடிப்படையான காரணங்கள் கண்டறியப்படல் வேண்டும் என்றும் அதற்கு தீர்வும் காணப்படல வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார். முரண்பாடுகளை களைந்து மீள்நல்லிணக்கத்தை (Reconciliation)  ஏற்படுத்துவதென்பது என்பது நடைபெற்ற அநியாயங்களுக்கு நீதி பெற்றுக் கொள்ளுதலும் இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொள்ளுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும்போதே உண்மையான மீள்நல்லிணக்கம் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டுகின்றார். தத்துவரீதியாக சுமந்திரன் அவர்கள் மேலே கூறியுள்ள விடயங்களுடன் முரண்பட முடியாது. ஆனால் அவர்கூறும் இன மீள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்பதன் பிரதான இரு விடயங்களான, நீதி நியாயங்களை அடைந்து கொள்ளுவது தொடர்பாகவும் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைந்து கொள்வது தொடர்பாகவும் அவர் முன்வைத்துள்ள ஆபத்தான அணுகுமுறைகள் பற்றியே நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

உலகின் ஏனைய இடங்களில் இனங்களுக்கிடையில் மீள்நல்லிணக்கம் ஏற்பட்டுள்ள இடங்களை எடுத்துப் பார்த்தால், அநியாயங்கள் செய்த ஆட்சி கவிழ்ந்து, அநியாயங்கள் செய்த ஆட்சியாளர்களது கொள்கையை நிராகரிக்கும் புதிய ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்த பின்னரே அத்தகைய முரண்பாடுகளை களைந்து மீள்நல்லிணக்கத்தை (Reconciliation)  ஏற்படுத்தும் செயற்பாடுகள் நடைபெற்றிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த விடயத்தை சுட்டிக்காட்டியவாறு தொடர்ந்து அவர்கூறும் விடயம் யாதெனில், இலங்கையை பொறுத்தவரை அநியாயங்கள் செய்த ஆட்சியே தற்போது அதிகாரத்தில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வகையில் உங்களுக்கு (புலம்பெயர் தமிழர்களுக்கு) ஓர் விடயத்தினை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அந்த விடயத்தினை நீங்கள் ஆழமாக கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கூறி பின்வரும் கருத்தை முன்வைத்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச மட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவும், ராஐபக்சவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இராணுவத் தளபதிகளுகு எதிராகவும், மேற்கொள்ளும் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகளும், ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளும், சர்வதேச சமூகத்திடமிருந்து வரும் அழுத்தங்களும் சிறீலங்கா அரசாங்கத்தினதும், ராஐபக்கசவின்தும் செல்வாக்கை சிங்கள மக்கள் மத்தியில் அதிகரிக்கவே  செய்கின்றது என்றும் கூறியுள்ளார். இந்த விடயத்திற்கு நாம் ஓர் தீர்வு காணவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவரது  உரையூடாக அவர் கூற முற்படும் விடயம் நீதிநியாயம் பெறுவதற்கும் தீர்வு பெறுவதற்கும் முதற்கட்டமாக ஆட்சி மாற்றம் தேவை என்பதாகும். அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு ஆட்சியிலுள்ள ராஐபக்சவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது. ஆனால் புலம்பெயர் தமிழ் மக்களது செயற்பாடுகள் ராஐபக்சவின் செல்வாக்கை வளர்ப்பதாகவே அமைக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு செயற்பட்டால் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி பெறும் நோக்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தடுத்து நிறுத்தும் வகையில் சுமந்திரன் அவர்கள் கருத்துக்களை கூறுவது இது முதற் தடவையல்ல.

கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலண்டன் கிளை ஒழுங்கு செய்த கூட்டத்தில் அவர் உரையாற்றும் போது, போர்க் குற்ற விசாரணைகளை வலியுறுத்தும்போது புலம்பெயர் தமிழ் மகக்ள் நிதானமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் போரில் ஈடுபட்டது இராணுவம் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர். சிறீலங்கா அரசுக்கு எதிராக மட்டும் விசாரணையை கோரமுடியாது புலிகளுக்கு எதிராகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு நீங்கள் தயாரா? இல்லை என்றால் நீங்கள் அதனை வலியுறுத்துவதனை பற்றி சற்று சிந்திக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதனை விடவும், ஏப்ரல் 2ம் திகதி, 2010 அன்று யாழ்ப்பாணம் டேவிட் றோட்டில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் சுமந்திரன் அவர்களுக்கும் எனக்கும் இடையில் நேரடி விவாதம் ஒன்று புத்திஜீவிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் கருத்துத் தெரிவித்த சுமந்திரன் அவர்கள், புலிகள் அழிக்கப்பட்டமை தர்மத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், தன்னைப் பொறுத்தவரை ஆயுதப்போராட்டம் தவறு என்றும், ஆயுதப் போராட்டத்தை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார். தமிழ் மக்களது உரிமைக்கான ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டமையை மகிழ்ச்சியுடன் வரவேற்பது போலவே அக்கருத்துக்கள் அமைந்திருந்தன.

அத்துடன், விக்கிலீக்ஸ்(Wikileaks) ஊடாக நாம் அறியக்கூடியது யாதெனில், சிறீலங்காவுக்கான அமெரிக்கா தூதுவர் பற்றீசியா புட்டெனிஸ் அவர்கள், திரு.சம்பந்தன் அவர்களுடனான சந்திப்பொன்றில் போர்க்குற்றம் தொடர்பாக எத்தகைய கட்டமைப்பு நிறுவப்பட வேண்டும் என மீண்டும், மீண்டும் வினாவியதற்கு, சம்பந்தன் அவர்கள் பதிலளிக்காது தொடர்ச்சியாக மௌனம் காத்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய அனைத்து விடயங்களையும் தொகுத்துப் பார்க்கையில், போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்றும்,  நீதி நியாயங்கள் வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் கூறிவருவது  போர்குற்றம் போன்ற விடயங்களில் தாம் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பது போன்று தமிழ் மக்களை ஏமாற்றி நம்பவைத்து பிறசக்திகளின்   நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றவுமே ஆகும்.  அத்துடன், நடைமுறை ரீதியில் போர்க்குற்றங்கள் தொடர்பான சுயாதீனமான விசாரணையை இல்லாமல் செய்வதே கூட்டமைப்பினரின் இரகசிய நிகழ்ச்சி நிரல் என்பதும் தெளிவாகின்றது.

போர்க்குற்ற விசாரணையை கைவிடும் பாதையில் தாமும் செல்வதுடன், தமிழ் மக்களையும் விரும்பி கைவிடச் செய்யும் பாதையில், கொண்டு செல்வதே கூட்டமைப்பினரின் மறைமுக நோக்கம் என்பதனை எமது  மக்கள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.  தமிழ் மக்களாக விரும்பி சுயாதீனமான சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கைவிடச் செய்வதற்கு இன்னும் பலகாரணங்களை கூறிக் கொண்டு, கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்காலத்தில் பல்வேறு கோணங்களில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மேலும், ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்கு அவர் கூறும் இன்னுமொரு விடயம் யாதெனில்,  தமிழ் மக்கள் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள வேண்டுமாம். அதாவது நேரடியாக சிங்கள மக்களிடம் சென்று தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது, என்ன வேண்டும் ஏன் வேண்டுமென்ற நியாயங்களை தெளிவுபடுத்த வேண்டுமாம். தமிழ் மக்கள் நாட்டைப் பிரிப்பதற்கு முற்படுகின்றார்கள் என்று சிங்கள தலைவர்கள் சிங்கள மக்களுக்கு பொய்களை கூறி வருகின்றனர். அதனால் தற்போதுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்;வைக்காண வேண்டும் என்பதாகும் என்பதனை தெளிவுபடுத்தியுள்ளோம்  என்றும் கூறியுள்ளார். அத்துடன் இவ்விடயங்களை நேரடியாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவரது கருத்தானது சிங்கள மக்கள் முட்டாள்கள், அவர்களுக்கு தமிழ் மக்களுக்கு என்ன நடந்ததென்பதும், நடைபெறுகின்றதென்பதும், என்ன வேண்டும், என்பதும் பற்றி ஒன்றும் விளங்கவில்லை. அத்துடன், இது வரை காலமும் தலைமை வகித்த தமிழ் தலைவர்களுக்கு (தந்தை செல்வா உட்பட) சிங்கள மக்களுக்கு எமது பிரச்சினையை விளக்கும் எந்தகைய திறமையும்;, ஆற்றலும் இல்லை என்பது போலவும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள  உறுப்பினர்களை விட திறமையான சிங்கள அறிவும் அரசியல் அறிவும் இருக்கும் விக்கிரமபாகு கருணாரட்ண போன்ற நபர்களால் கூட புரிய வைக்க முடியாததை சிங்கள மக்களுக்குப் புரிய வைக்கப்போகின்றார் என்ற தொனிப்படவே அவரது கருத்துக்கள் தென்படுகிறது. இக்கருத்தானது, தமிழ்மக்கள் ஆக்கபூர்மான பணிகளில் ஈடுபடுவதனை திசைதிருப்பும் கபடநோக்கம் கொண்ட உத்திகளே ஆகும். தமிழர்கள் தனிநாடு கேட்கின்றனர் என்றே சிங்கள மக்கள் கருதுகின்றனர் என்றும், தனிநாட்டுக்குப் பதிலாகவேறு தீர்வை ஏற்றுக் கொள்ள தமிழ் மக்கள் தயாராக உள்ளனர் என்பது சிங்கள மக்களுக்கு தெரியாது என்றும்  அதனை நாம்(த.தே.கூ) சிங்கள மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.

இக்கருத்து சுமந்திரன் அவர்களது தனிப்பட்ட கருத்து என்றால், அவரது அரசியல் அனுபவம் இன்மையை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் இதுவே கூட்டமைப்பினரின் கருத்தாக இருந்தால் அது பாரதூரமான விடயமாகும். ஏனெனில், 1970 ஆம் ஆண்டு,  தேர்தலில் போட்டியிடும் தனிநாட்டை வலியுறுத்தும் நபர்களையும் கட்சிகளையும்  நிராகரிக்குமாறும் சமஸ்டியை வலியுறுத்தும் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரிக்குமாறும் தந்தை செல்வா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி வெளிப்படையாக அதன் தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தி போட்டியிட்டு, வெற்றியும் பெற்றிருந்தது. இது சிங்கள மக்கள் அறியாத விடயமல்ல. சமஸ்டி தனிநாடு இல்லை என்பது சிங்கள மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல. அத்துடன் 70 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்துபவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றும் சமஸ்டியை வலியுறுத்தும் தம்மை வெற்றிபெறச் செய்யுமாறும் கோரி போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வநாயகம் அவர்கள் பற்றி சிங்கள மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

தனிநாட்டுக்கு முற்றிலும் எதிரானவரும்  சமஸ்டியை கூட கொடுக்க தயாரில்லாதவருமான ரணில் விக்கரமசிங்க புலிகளுடன் ஒப்பந்தம் செய்தமைக்காக, அவர் சமஸ்டியை கொடுக்கப்போகிறார் என்று கருதிய சிங்கள மக்கள் அவரை தேர்தலில் தோற்கடித்து, இன்றுவரை அவரை ஓரம் கட்டியுள்ளனர். தமிழ் மக்களுக்கு உள்ள உரிமைகள் மதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படல் வேண்டுமென்றும் தனிநாடு உருவாககுவதனை தான் விரும்பவில்லை என்றும் கூறிவரும் விக்கிரமபாகு கருணாரட்ண தோற்கடிக்கப்பட்டுள்ளார். மேற்கூறிய இரு சம்பவங்களுக்கும் காரணம் ஒன்றாகவே உள்ளது.

இவை அனைத்திற்கும் காரணம் சிங்கள மக்கள் தனிநாட்டை விரும்பவில்லை என்பது  மட்டுமல்ல. தமிழ் மக்களுடன் அதிகாரங்கள் பகிரப்படுவதனை அவர்கள் விரும்பவில்லை. இதற்குக் காரணம் இலங்கை ஓர் பௌத்த சிங்கள நாடு என்றும், அதிகாரங்கள் பௌத்த சிங்களவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டுமென்றும் சிங்கள மக்கள் விரும்புகின்றனர். அது மட்டுமல்லாமல், தமிழர்கள் இலங்கைத் தீவின் ஏதாவதொரு பகுதியிலாவது உரிமைகோர இடமளித்தால், பிராந்தியத்தில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்கள் பிராந்தியத்தில் சிறுபான்மையாக உள்ள சிங்கள பௌத்தர்களை விழுங்கிவிடுவார்கள் என்றும் அஞ்சுகின்றனர்.

நான் ஏற்கனவே எனது முந்தைய பத்திகளில் குறிப்பிட்டது போல, அதாவது சிங்களவர்களை பொறுத்தவரையில், இலங்கைத் தீவில் தமிழருக்கு உரிமையை எப்பொழுது அங்கீகரிக்கின்றார்களோ, அன்றய தினம் அவர்களது இனத்தின் இருப்பின் அழிவுக்கு முதற்படியாக அமையுமென அஞ்சுகின்றனர். ஆகவே, அவர்களை மாற்றுவதற்கான நிர்ப்பந்தத்தை உண்டாக்கினாலே தவிர, எந்த நியாயத்தை கூறினாலும் அவர்களாகவே விரும்பி தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இந்த விடயத்தினை கூட்டமைப்பினர் புரிந்தும் புரியாதது போல செயற்படுவது மிகவும் ஆபத்தான விடயமாகும். தனது உரையின் ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநியாயங்கள் தொடர்பாகவும், சிங்கள அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக  வெளிபடையாகவும், கடுமையாகவும் கூறுவதன் மூலம், தாம் தமிழ் மக்களது நலனில் அக்கறையுள்ளவர்கள் என்று தமிழ் மக்களை நம்பவைத்து, இவ்வாறு தம்மை  நம்பிய மக்களை ஏமாற்றி, தாம் பிறசக்திகளது நலன்களை நிறைவேற்றும் பாதையில் கொண்டு செல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஓராணியாக நின்று முயல்வது பற்றி தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மீள்நல்லிணக்தின் அடுத்த கட்டம், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அதற்கான அணுகுமுறைகள் என அவரது உரையில் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பாக அடுத்த பத்தியில் ஆராய்வோம்.

 - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-

பழைய நிலைகளைக் கடக்காதவரை..........?


தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் என்று வரும் போது தற்போதைய சூழ்நிலையில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டிய அல்லது தொடர வேண்டிய அவசியத்தைக் கொண்டவையாக அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே அதிகாரப் பரவலாக்கத்துடன் தொடர்புடைய முக்கிய விவகாரங்களில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளே அமைந்திருக்கின்றன. இனப்பிரச்சினைத் தீர்வில் பங்கும் ஈடுபாடும் கொண்ட வேறு தரப்புகள் இருக்கின்ற போதிலும், அவை தற்போதைய சர்ச்சையில் சம்பந்தப்படாமல் இருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த வருடம் அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தைகள் தற்போது ஒரு முட்டுக்கட்டை நிலையை அடைந்திருக்கின்றன. அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் முக்கியமான விவகாரங்கள் குறித்து அக்கறையுடன் ஆராய வேண்டிய நிலை வந்தபோது அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பது குறித்த யோசனையை முன்வைத்தது. கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தைகளில் எட்டப்படக்கூடிய எந்தவொரு இணக்கப்பாட்டையும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்வைத்து ஏனைய தரப்பினரும் ஆராயக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அரசாங்கம் இணங்கியிருந்தது என்பதில் எந்தவிதமான இரகசியமுமேயில்லை. தாங்கள் அவ்வாறு இணங்கிக் கொள்ளவில்லையென்று அரசாங்கத் தரப்பினர் ஒருபோதுமே மறுதலிக்கவில்லை.

ஆனால், இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடரவேண்டுமானால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு அதன் பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையை அரசாங்கம் விதிக்கத் தொடங்கியதையடுத்தே முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கை இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சர்வதேச சக்திகளும் அரசாங்கத்தை வலியுறுத்தி கேட்கின்ற போதிலும் கூட, அரசாங்கம் அதன் நிலைப்பாட்டைத் தளர்த்துவதற்குத் தயாராயில்லை. தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு கூட்டமைப்பு முன்வராத பட்சத்தில் அதனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியாது என்று அரசாங்கம் அடித்துக் கூறிக்கொண்டிருக்கிறது.

உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய மனித உரிமைமீறல்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு இருக்கும் பொறுப்புடைமை குறித்து கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக சர்ச்சைகளைக் கிளப்பிவந்திருக்கும் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் குறிப்பாக, அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் நிலைப்பாடுகளில் கணிசமான அளவுக்குத் தளர்வுகளைச் செய்து, இலங்கையில் சமூகங்கள் மத்தியில் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய செயன்முறைகளுக்கு உத்வேகத்தைக் கொடுப்பதற்காக அரசாங்கத்துடன் ஒத்துழைப்புத் தன்மையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதற்கான விருப்பத்தை வெளிக்காட்டிய வண்ணமிருக்கின்றன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அவதானிப்புகளிலும் கண்டுபிடிப்புகளிலும் இருக்கக்கூடிய பெருவாரியான குறைபாடுகளுக்கு மத்தியிலும் அதன் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அக்கறை காட்ட வேண்டுமென்றும் இந்த நாடுகள் வேண்டுகோள் விடுத்தவண்ணமிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அரசாங்கம் மசிவதாக இல்லை. அது முன்னைய நிலைப்பாடுகளில் ஆழக்காலூன்றி நிற்கின்றதே தவிர, விட்டுக் கொடுப்புகளை சிறிதளவேனும் செய்து சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்குத் தயாராயில்லை.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயன்முறைகளில் பங்கேற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக மறுக்கவில்லை. அரசாங்கம் தங்களுக்கு அளித்த உறுதிமொழியின் பிரகாரம் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் காணப்படக்கூடிய எந்தவொரு இணக்கப்பாட்டையும்  தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கும் கட்டத்தில் அதில் பங்கேற்கத் தயாராயிருப்பதாக கூட்டமைப்பின்  தலைவரான இரா.சம்பந்தன் பகிரங்கமாகவே கூறியிருக்கிறார். மறுபுறத்திலே இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான சகல வழிவகைகள் குறித்தும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் மாத்திரமே ஆராய முடியும் என்று கூறுகின்ற அரசாங்கம் எந்தெந்த விவகாரங்களில் அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்யவோ பகிர்ந்தளிக்கவோ முடியாது என்று முக்கிய அமைச்சர்களும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் எழுந்தமானமாகப் பிரகடனங்களைச் செய்வதற்கு அனுமதித்திருக்கிறது. தமிழ் பேசும் மக்களுக்கு எதைக் கொடுக்கக்கூடாது என்று கூரைமுகட்டில் ஏறி நின்று எவர் வேண்டுமானாலும் கூச்சலிடலாம் அது பிரச்சினையில்லை. ஆனால், அதேமக்களுக்கு அவசியமானவை எவையென்று ஜனநாயக வழியில் கோரிக்கையை முன்வைப்பது மாத்திரம் தான் நாட்டின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்துக்கும் அச்சுறுத்தலானதாக அரசாங்கத் தலைவர்களின் கண்களுக்குத் தெரிகிறது.

இத்தகையதொரு பின்புலத்திலே முட்டுக்கட்டை நிலையை அகற்றுவதற்கு வழியென்ன என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத்துடனான எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணைப் பணிக்கு சர்வதேச உதவி கிடைக்குமானால் அது வரவேற்கத்தக்கது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கிறார்கள் . அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்க அமைச்சர் அலிசா அய்ரெலைச் சந்தித்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனுசரணையாளராகச் செயற்படுமாறு அமெரிக்காவைக் கேட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஐக்கியநாடுகள், பொதுநலவாய அமைப்பு, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் அனுசரணையை கூட்டமைப்பு வரவேற்பதாகவும் இதுவிடயத்தில் தங்களது விருப்புக்குரிய தெரிவு என்று எதுவும் இல்லை என்றும் அதன் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கிறார்.

ஆனால், கூட்டமைப்பின் தற்போதைய உள்நிலைவரங்களை நோக்கும் போது இத்தகைய அனுசரணை நாடும் நிலைப்பாடு அங்கத்துவக் கட்சிகளின் ஏகோபித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று நம்புவதற்கில்லை. அது வேறு விடயம். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பதில் கூட்டமைப்பு காட்டுகின்ற தயக்கத்துக்கு அடிப்படைக் காரணம் இலங்கை இனப்பிரச்சினையின் வரலாற்றில் இதுகாலவரையில் அரசியல் தீர்வைக் காண்பதற்கெனக் கூறிக் கொண்டு கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாடுகளுக்கும் வட்டமேசை மகாநாடுகளுக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களுக்கும் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளுக்கும் நேர்ந்த கதி பற்றிய தமிழ் மக்களின் கசப்பானதும் கனதியானதுமான அனுபவங்களேயாகும்.  போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் தோன்றியிருப்பதாக அரசாங்கத் தலைவர்கள் கூறுகின்ற புதிய அரசியல் சூழ்நிலையில் அந்த பழைய விடயங்களை மறந்து புதிதாக சிந்திக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தும் அரசாங்கம் பழைய ஆழக்காலூன்றிய நிலைப்பாடுகளில் இருந்து கிஞ்சித்தும் விலக மறுப்பதில் எந்த அசௌகரியத்தையும் காண்பதாக இல்லையே!

நன்றி தினக்குரல் 

மீண்டும் ஜெனிவாவில் சூழும் கருமேகங்கள்!


".....நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்துள்ளோம் அதன் அறிக்கை வரும் வரை பொறுத்திருங்கள் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க மன்றாட்டமாகக் கேட்டிருந்தார். இப்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வந்து விட்ட நிலையில் அது குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமையவில்லை என்று மேற்குலக நாடுகள் விமர்சித்துள்ளன.இந்தநிலையில், அடுத்த கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவை காரணமாக வைத்து அரசினால் தப்பிக்கவும் முடியாது. அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில் அமையவில்லை என்று கூறிய மேற்கு நாடுகளால் அதனை ஏற்றுக் கொள்வதாக கூறி ஒதுக்கி விடவும் முடியாது. எனவே அடுத்து வரும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் நடக்கும் என்றே நம்பப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விவாதத்துக்கு வருவதை தடுக்க அரசதரப்பு முனைகிறது, அதற்காக ஆதரவு தேடுகிறது. அப்படி அது விவாதத்துக்கு வந்தாலோ, தீர்மானம் ஏதும் கொண்டு வரப்பட்டாலோ, அதை எதிர்கொள்வதற்கும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது. அரசாங்கம் இந்தக் கூட்டத்தொடரையிட்டு அச்சப்படவில்லை, அதனை எதிர்கொள்ளத் தயார் என்று கூறுகின்ற போதும் உள்ளூர அதற்கு நடுக்கம் இருக்கிறது. அரசதரப்பு இப்போதே பரபரப்பாவதில் இருந்து இதனை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது......"

வரப்போகும் பெப்ரவரி 27ம் திகதி தொடக்கம் மார்ச் 23ம் திகதி வரை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது அமர்வு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் இப்போது இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்கடியானதொரு விவகாரமாக மாறி வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற பல நாடுகள் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு ‘செக்‘ வைக்க காத்திருக்கின்றன. அண்மையில் ஜெனிவா அக்கடமியில் மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஏற்பாட்டில் ஒரு கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.ஜெனிவாவில் உள்ள பல்வேறு நாடுகளினதும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இலங்கைக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை.  அத்துடன் அழைப்பு விடுக்கப்படாத எவரையும் பங்கேற்க அனுமதி வழங்கப்படவும் இல்லை.இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற நாடுகளின் தூதுவர்கள், பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க சட்டநிபுணரும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் ஸ்டீபன் ரட்னர், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பகமான சாட்சியங்கள் உள்ளதால், சர்வதேச விசாரணைகள் அவசியம் என்று ஐ.நா நிபுணர்குழு வலுவான பரிந்துரை ஒன்றைச் செய்திருந்தது. ஆனால் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமித்த இந்த நிபுணர்குழுவின் அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமலேயே அதனை நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் கடந்த நவம்பரில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பியிருந்தார் பான் கீ மூன். இப்போதும் அவர் இந்த விவகாரம் தன் கையில் இருந்து போய்விட்டது என்றவாறே பதிலளிக்கிறார். இனிமேல் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உள்ள உறுப்பு நாடுகள் பார்த்துக் கொள்ளும் என்று கடந்தவாரம் கூட ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் கைவிரித்திருந்தார்.

ஆக,

இலங்கை மீதான எந்த நடவடிக்கையும் இனிமேல் ஜெனிவாவில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதில் பான் கீ மூனும் ஐ.நாவும் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது உறுதியாகத் தெரிகிறது. இந்தநிலையில் அடுத்து வரப்போகும் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் குறித்த விவாதத்தைத் தடுப்பது அரசுக்குப் பெரும் சவாலான காரியமாக மாறியுள்ளது.

அடுத்துவரும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் நடப்பது பெரும்பாலும் உறுதி என்றே தகவல்கள் கூறுகின்றன.

இந்த அமர்வில் எப்படியாவது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து விவாதிக்க சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான நாடுகள் விரும்புகின்றன. ஏற்கனவே அமெரிக்கா கடந்த கூட்டத்தொடரில் இந்த அறிக்கையை விவாதிக்க முயற்சி எடுத்தது. அது கைகூடவில்லை. இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை அரசு மூலம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதே சர்வதேச சமூகத்தின் திட்டம். அப்படி விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதத்துக்குள் எப்படியாவது இலங்கையை இழுத்து விட்டு விடலாம் என்று அந்த நாடுகள் காத்திருக்கின்றன. ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக இன்னும் எந்த முடிவையும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அறிவிக்கவில்லை. அதற்காக அந்த அறிக்கையை மனிதஉரிமைகள் பேரவை தூக்கிப் போட்டு விட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது. அதனை அவர்கள் எந்த நேரத்திலும் கையில் எடுக்கலாம். எந்தவகையிலும் அதனைக் கவனத்தில் எடுக்காமல் மறைத்துவிட முடியாது, ஏனென்றால் அதில் தீவிரமான மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் உள்ளடங்கியுள்ளன. அப்படி அந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை புதைத்து விடுமேயானால் அது மிகப்பெரிய கறையாக அமைந்து விடும்.

எனவே,

இந்தக் கூட்டத்தொடரில் எப்படியாவது இலங்கை விவகாரத்தைக் கையில் எடுக்க ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையை இயக்குவது 47 உறுப்பு நாடுகளும் தான். அந்த நாடுகள் தான் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கப் போகின்றன.  இந்தக் கூட்டத்தொடரில் இதுவரை பலமுறை இலங்கை அரசு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தது. கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில்நடந்த கூட்டத்தொடரிலும் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்க கனடா முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அரசாங்கம் ஒருவழியாக நல்லிணக்க ஆணைக்குழுவைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொண்டது. நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்துள்ளோம் அதன் அறிக்கை வரும் வரை பொறுத்திருங்கள் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க மன்றாட்டமாகக் கேட்டிருந்தார். இப்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வந்து விட்ட நிலையில் அது குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அமையவில்லை என்று மேற்குலக நாடுகள் விமர்சித்துள்ளன.

இந்தநிலையில், 

அடுத்த கூட்டத்தொடரில் நல்லிணக்க ஆணைக்குழுவை காரணமாக வைத்து அரசினால் தப்பிக்கவும் முடியாது. அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில் அமையவில்லை என்று கூறிய மேற்கு நாடுகளால் அதனை ஏற்றுக் கொள்வதாக கூறி ஒதுக்கி விடவும் முடியாது. எனவே அடுத்து வரும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதம் நடக்கும் என்றே நம்பப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விவாதத்துக்கு வருவதை தடுக்க அரசதரப்பு முனைகிறது, அதற்காக ஆதரவு தேடுகிறது. அப்படி அது விவாதத்துக்கு வந்தாலோ, தீர்மானம் ஏதும் கொண்டு வரப்பட்டாலோ, அதை எதிர்கொள்வதற்கும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது. அரசாங்கம் இந்தக் கூட்டத்தொடரையிட்டு அச்சப்படவில்லை, அதனை எதிர்கொள்ளத் தயார் என்று கூறுகின்ற போதும் உள்ளூர அதற்கு நடுக்கம் இருக்கிறது. அரசதரப்பு இப்போதே பரபரப்பாவதில் இருந்து இதனை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.


- நன்றி இன்போ தமிழ் -

அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்: பகுதி II


சில சந்தர்ப்பங்களில், அனைத்துலக ஒழுங்கில் உண்டாகும் மாற்றங்களால் புரட்சிகள் உருவாகக்கூடும். வேறு சில சந்தர்ப்ங்களில், புரட்சிகளின் தோற்றத்தால் அனைத்துலக ஒழுங்கு மாற்றமடையும்.  கடந்த பத்தியிலே, பூகோள அரசியலில் பொருளாதாரத்தின் முக்கியத்துவம், அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டத்தின் சுருக்கமான முக்கிய உள்ளடக்கங்கள், எதற்காக ஆசிய – பசுபிக் பிராந்தியம் அமெரிக்காவால் இலக்கு வைக்கப்படுகிறது? இலக்காகியுள்ள ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நகர்வுகள்  போன்றவிடங்களை ஆய்வுக்குட்படுத்தியிருந்தேன். (அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்)

இந்தப்பத்தி, அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டத்தினை மையப்படுத்தி தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகளுக்கான தயார்படுத்தல் மற்றும் அதற்கு ஆதரவான அனைத்துலக அளவிலான உதாரணங்களையும் ஆராய்கிறது.  

தமிழர்களின் இருப்பையும், எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சிந்தனைப் புரட்சியும், மாற்றங்களின் ஆரம்பமும். 

தமிழர்களின் துயர்படிந்த நெருக்கடி மிகுந்த இன்றைய சூழல் என்பது, எதிர்மறையான சிந்தனைப் பரப்புக்குள்ளேயே தமிழர்களை வைத்திருக்கத் தூண்டும். ஆகவே, எந்தப் புரட்சிக்கும் முன்னர், தமிழர்களுடைய மனங்களிலே ஆக்கபூர்வமான எதிர்காலத்தை நோக்கிய சிந்தனைப் புரட்சி உண்டாகவேண்டும். 

அத்துடன், தமிழர்கள் நலன்களை முன்வைத்து நகர்வது போல காட்டிக்கொள்ளும் நபர்கள், அமைப்புகள் மற்றும் நாடுகளின் இரகசிய நிகழ்ச்சி நிரலை புரிந்துகொண்டு, அதனைத் எதிர்கொண்டபடி அடுத்த கட்டத்தை உரியமுறையில் எட்டுவதற்கான உத்திகளும், உபாயங்களும் வகுக்கப்பட வேண்டும். ஏனெனில், இத்தகைய சக்திகளே, தமிழர்களை  எதிர்மறையான சிந்தனை தளத்திற்குள்ளேயே முடக்கி, தமிழ்த் தேசியத்திற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

உலகிலேயே விடுதலைப் போராட்டங்களுக்கு முதன்மையாகத் திகழ்ந்த தமிழ்த் தேசிய ஆயுதப் போராட்டம், தமிழ் மக்கள் மட்டுமன்றி, உலகின் பல்வேறு சக்திகளும், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கும் கூட அதிர்ச்சியளிக்கக் கூடிய முறையில் முடிவுக்கு வந்தது. 

அதேபோல், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் உண்டான ஆரம்பப் புரட்சிகளும், அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட ஆட்சிமாற்றமும் மேற்குலகின் புலனாய்வு அமைப்புகள் தொடக்கம் யாருமே எதிர்பார்த்திராத ஒன்றே. 

கடந்த காலங்களிலே தாய்லாந்து மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சிகள் கூட எதிர்வுகூறல்கள் இன்றி இடம்பெற்ற சம்பவங்களே ஆகும். போராட்டகரமான அரசியல் வாழ்விலே, புரட்சிகரமான மாற்றங்கள் எக்கணத்திலும் நிகழலாம். புரட்சிகள் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், சாதகமாகவும், பாதகமாகவும் அமையக்கூடும். ஆனால், புரட்சிகள் எப்போது, என்ன வடிவத்தில் இடம்பெறலாம் எனக் கூறமுடியாது. 

சில சந்தர்ப்பங்களில், அனைத்துலக ஒழுங்கில் உண்டாகும் மாற்றங்களால் புரட்சிகள் உருவாகக்கூடும். வேறு சில சந்தர்ப்ங்களில், புரட்சிகளின் தோற்றத்தால் அனைத்துலக ஒழுங்கு மாற்றமடையும். 

ஆகவே, தமிழர்களின் சமகால நிலையை கவனத்திற்கொண்டு சிறப்பான எதிர்காலத்துக்கு திட்டமிட வேண்டும். மாறாக, இன்றைய சவால்களை காரணமாகக் கொண்டு தமிழர்களின் எதிர்காலத்தை மீளமுடியாத வகையில் அடமானம் வைக்கமுடியாது. 

தமிழர்கள் பூகோள அரசியலில் சக்திமிக்க நாடுகளின் தேசிய நலன்களை கவனத்திற்கொண்டு, தமது தேசநலன்களுக்கான காய்களை அரசியல் சாணக்கியத்துடன் நகர்த்த வேண்டும். இது, சக்திமிக்க நாடுகளுடனான பொதுப்புள்ளி சந்திப்பின் ஆரம்பமாக அமையக்கூடிய வகையில் இருத்தல் வேண்டும். அதிலிருந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். 

எந்த சக்தியுமே, தமிழினம் ஒரு இனப்படுகொலையை எதிர்கொண்டு நிற்கிறது, நீண்டகாலமாக அவலங்களை சுமந்துகொண்டு வாழ்கின்றனர் என்ற அடிப்படையில் தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்க முன்வரப்போவதில்லை. ஆனால், தமிழர்களுடனான உறவு தமது தேசியநலனுக்கு சாதகமாக அமையும் என எண்ணினால், அதற்கேற்ற வகையில் காய்களை நகர்த்துவார்கள். 

தமிழர்கள் மனநிலை ரீதியான பலவீனமானவர்களாக இருக்கும் பட்சத்தில் அந்த பலவீனமான மனநிலையைப் பயன்படுத்தி தமது தேசியநலன்களை அடைவதற்கான கருவிகளாக தமிழர்களை பயன்படுத்திவிடுவார்கள். இதன் காரணமாக, தமிழர்களது நலன் புறக்கணிக்கப்படக்கூடிய சூழலுக்கான சாத்தியப்பாடுள்ளது. 

ஆகவே, தமிழர்கள் தாம் பலவீனமானவர்கள் என்ற மனநிலையை முதலில் உதறித் தள்ளவேண்டும். சவால்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கு சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும் கனிந்திருக்கின்றன. அவற்றை சரிவர இனம் கண்டு, அதற்கேற்ற நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும். 

யதார்த்தபூர்வமாக சிந்திக்கும் தன்மையும், சுயவிமர்சனமும் இருக்க வேண்டும். ஆனால், அவை ஒரு தேசத்தையோ, அமைப்பையோ, இனத்தையோ அல்லது தனிமனிதர்களையோ நகரமுடியாத சகதிக்குள் அமிழ்த்தி பின்னோக்கி நகர்த்துவதாக அல்லாமல், குறிப்பிட்டவற்றை உயர்ந்த நோக்கத்திற்காக முன் நோக்கி நகர்த்த வேண்டும். எதை எண்ணுகிறாயோ, அதுவே ஆகிவிடுகிறாய் என்ற கூற்றை நினைவிற்கொள்ளல் நன்று.

தமிழீழ விடுதலைப் புலிகள் பூகோள அரசியலையும், புதிய அனைத்துலக ஒழுங்கையும் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்ற கருத்தை புலிகள் களத்திலே இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் முன்வைக்கத் தொடங்கியிருப்போருக்கும், புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்ட காரணத்தால், தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டம் வெற்றிபெறுவது கேள்விக்குறியே எனக் கருதுவோருக்கும் பொதுவானதும், பொருத்தமானதுமான கருத்தொன்றை இப்பத்தியிலே பதிவுசெய்வது அவசியம் எனக் கருதுகிறேன். 

மேற்கூறிய இரு சாரருக்குமான பதில் அமெரிக்காவின் படை மற்றும் படைக்கல குறைப்புச் சொல்லும் சேதி என்ற பகுதிக்குள்ளும் பரவி நிற்கின்றது.

முதலாவதாக, பூகோள அரசியலையும், புதிய அனைத்துலக ஒழுங்கையும் புலிகள் சரிவர புரிந்துகொள்ளாததால்தான் தோற்கடிக்கப்பட்டார்கள் என்ற கருத்தை முன்வைப்பவர்களில் பலர், நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டம் வரை புலிகளின் இராணுவத் திறனில் நம்பிக்கை வைத்திருந்ததோடு, அதற்கேற்ற வகையிலேயே தமது கருத்துக்களையும் பதிவுசெய்து வந்தனர். அதற்கு முன்னர், அத்தகைய விமர்சனங்களை முன்வைத்திருந்ததாக அறிய முடியவில்லை. அத்தகையவர்கள், இராணுவ பலம் இல்லாத ஒரு காரணத்தினை முன்வைத்து தமிழ்த் தேசியப் போராட்டத்தை இனி முன்னெடுக்க முடியாதென வாதிட்டு வருகின்றனர். 

தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கான முகவரியாக, அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக ஆயுதப் போராட்டம் விளங்கியது. ஆனால், அதன் அழிவோடு, தமிழ்த் தேசியப் போராட்டமும் அழிந்து விட்டதாகவோ அல்லது இனி அது சாத்தியப்பாடான விடயம் இல்லையென்றோ கூறமுடியாது. 

உண்மையிலேயே,பலகோணங்களிலும், ஆழமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும் சிந்திப்பதன் அடிப்படையில் முள்ளிவாய்க்காலில் நடந்த விடயங்களைப் பார்ப்போமானால், அங்கு இடம்பெற்ற செயற்பாடுகள் ஊடாகவே அடுத்த கட்ட போராட்டத்திற்கான சேதி சொல்லப்பட்டுவிட்டது. 

ஒரு போராட்டத்தில் சில ஆனால் முக்கியமான விடயங்கள் எழுத்திலும், உரையிலும் சொல்லப்படுபவையல்ல. மாறாக, குறித்த செயல்கள் ஊடாக புரியப்பட வேண்டிய சூழலை உருவாக்குகின்றன. இது ஈழப்போராட்டத்தில் இதற்கு முன்னரும் இடம்பெற்றிருக்கிறது. 

முன்னைய காலங்களின் செயல்கள், பின்னர் உரைகளாக, ஆவணங்களாக வெளிவந்தது. ஆனால், முள்ளிவாய்காலில் அடுத்த கட்ட போராட்டத்துக்காக இடப்பட்ட அத்திபாராம் மௌனத்தின் ஊடாக சொல்லி செல்லப்பட்டுள்ளது. 

புரிந்தவர்களால், உலக அரசியல் நிலவரங்களுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய அரசியல் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியும். புரியமுடியாதவர்கள், புரிந்துள்ளவர்களை அல்லது புரிய முற்படுபவர்களை குழப்பத்திற்குள் ஆழ்த்தி தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டத்தை அழிப்தற்கு முற்படுவார்கள்.

போராட்டத்தின் தளங்கள், களங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் அதன் வடிவங்கள் மாற்றமடையலாம். ஆனால், பாரிய இழப்புக்களுக்கு மத்தியிலும் உரிமைக்காக போராடும் ஒரு இனத்தின் மனஉறுதியும், ஆத்மபலமும் தளர்வடையக்கூடாது. நாளை என்பது, விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் உடையவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அந்த நாளைக்கான மாற்றத்திற்கான ஆரம்பத்தை அறிவியல் ரீதியாக சிந்திப்பதால் உண்டாகும் சிந்தனைப் புரட்சியால் உண்டாக்க முடியும். இந்த சிந்தனைப் புரட்சியில் முற்போக்கு சிந்தனையும், நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் முன்னணி வகிக்க வேண்டும். 

அமெரிக்காவின் படை மற்றும் படைக்கல குறைப்புச் சொல்லும் சேதி

எதிர்கால போர்க்களங்கள், ஆட்பல எண்ணிக்கையால் வெல்லப்படக் கூடியவையல்ல. மாறாக, தொழில்நுட்ப ஆளுமையே இனி போர்க்களங்களில் மேலாண்மை செலுத்தப் போகிறது. இதன் அடிப்படையிலேயே, அமெரிக்காவின் அடுத்த பத்தாண்டுக்கான பாதுகாப்பு திட்டத்த்தின்படி, அமெரிக்க இராணுவத்தின் எண்ணிக்கை சுமார் நூறாயிரம் இராணுவத்தால் குறைக்கப்படவிருக்கிறது. அதுமட்டுமன்றி, அண்மையில் லிபியா மீது மேற்கொண்ட தாக்குதல் வரை, அமெரிக்காவின் படைப்பல ஆளுமையை வெளிப்படுத்துவதாக அவர்களின் வான்படை இருந்து வந்தது. 

சேர்பியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான தாக்குதல்களில் எல்லாம் அமெரிக்கா வான்படையின் பங்கு முக்கியமானது. அத்தகைய வான்படையின் சுமார் இருநூறு வானூர்திகளையும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் திட்டம் குறைத்துள்ளது. இந்த இருவிடயங்களும், எதிர்கால போர்களங்களில் அதிநவீன இராணுவத் தொழில்நுட்பம் மேலாண்மை செலுத்த போவதையே கட்டியங்கூறுகின்றன. 

அதேவேளை, உலக சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் நாடுகள் என அடையாளாப்படுத்தப்படும் சில நாடுகளில், அனைத்துலக ரீதியான இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலாக மக்கள் புரட்சிகளை தூண்டிவிடும் நடவடிக்கைகளும் மும்முரமடைகின்றன. 

இவையெல்லாம், ஆளணி வளத்தாலும், சாதாரண மற்றும் குறிப்பிடத்தக்க நவீனரக ஆயுதங்களாலும் எதிர்காலப் போர் அரங்குகளில் செல்வாக்கு செலுத்தமுடியாது என்பதையே வெளிப்படுத்துகின்றன. ஆகவே, தொழில்நுட்ப நிபுணத்துவமும், விரல் நுனி தகவல்களுமே இனிவரும் கால போர்களங்களின் முடிவை நிர்ணயிக்கப் போகின்றன என்பதை எடுத்துக் கூறுகின்றன.  

வரலாறு என்றுமே நேர்கோட்டில் பயணிப்பதில்லை

அனைத்துலக உறவுகள் காலத்திற்கு காலம் மாற்றமடைபவை என்பதை கடந்த பத்தியிலே குறிப்பிட்டிருந்தேன். இது, வரலாறு என்றுமே நேர்கோட்டில் பயணிப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. இதற்கான சில அனைத்துலக உதாரணங்களைப் பார்ப்போம். 

பொஸ்னியாவின் செர்பனிக்காவில் 1995ம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையையோஇ அல்லது பொஸ்னியாவில் 1992 தொடக்கம் 1995 வரை நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்களையோ மேற்குலகு தடுத்து நிறுத்தவில்லையென்ற குற்றச் சாட்டுக்கள் பரவலாகவுள்ளன. 

இத்தனைக்கும், பொஸ்னியா ஐரோப்பாவிற்கான நுழைவாசல்களில் ஒன்று. அத்துடன், அமெரிக்காவுக்கு சவால் விடும் ரஸ்யாவும் இதே பிராந்தியத்திலேயே உள்ளது. அப்படியிருந்தும், அமெரிக்கா, பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் போன்ற சக்திமிக்க மேற்குநாடுகள் பாரிய மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதனை தடுக்கவில்லையென்ற குற்றச் சாட்டினை மேல்குலக ஆய்வாளர்களே முன்வைத்துள்ளனர். 

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில், அமெரிக்காவின் தலையீட்டை வலியுறுத்தி அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஜக் சிராக்  [Jacques Chirac] அவர்கள் அழுத்தத்தை காட்டிய போது கூட, அமெரிக்கா தயக்கத்துடனயே சம்மதம் தெரிவித்ததாக ஆய்வுகள் ஊடாக அறியமுடிகிறது. 

பாரிய மனித அழிவுகளுக்கு பின்னர், பொஸ்னியாவிலிருந்த இனக்குழும மோதுகைக்கு முடிவுகட்டி சமாதானத்தை உருவாக்கும் முகமாக 1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்குலகால் கொண்டுவரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில், சேர்பிய அதிபர் சுலோபோடன் மிலோசோவிக்  [Slobodan Milošević],  குறோசிய அதிபர் பிரான்ஜோ ருட்மன்  [Franjo Tuđman], பொஸ்னிய அதிபர் அலியா செற்போவிக்  [Alija Izetbegović]  மற்றும் பொஸ்னிய வெளிவிவகார அமைச்சர் முகமட் சசிர்வெ  [Muhamed Sacirbey]  ஆகியோர் கையெழுத்திட்டனர். 

இந்த உடன்படிக்கையானது அமெரிக்காவின் டேற்றன் பிராந்தியத்தில் கைச்சாத்திடப்பட்டதால், டேற்றன் உடன்படிக்கை  [Dayton Agreement]  என பரவலாக அறியப்படுகிறது. இதில், குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், ஆரம்பத்தில் பொஸ்னியா போரில் தலையிடுவது தமது தேசிய நலனுக்கு பெருமளவில் உகந்தது அல்ல என்பதால், அதில் தலையிடுவதற்கு ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய மேற்குலகு, பின்னர் டேற்றன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட முக்கியமானவர்களில் ஒருவரான சுலோபோடன் மிலோசோவிக்குக்கு அனைத்துலக சட்டத்திற்கு அமைவாக மரண தண்டனை பெற்றுக்கொடுத்தமைக்கு பின்னணியிலிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு கொல்லப்பட்ட லிபியாவின் அதிபர் கடாபி ஒரு காலத்தில் மேற்குலகோடு விரோதப் போக்கை கடைப்பிடித்து வந்தார். பின்னர், மேற்குலகுக்கும் அவருக்கும் இடையிலான உறவுகள் அந்நியோன்யம் மிக்கதாக மாற்றமடைந்தது. இறுதியில், கடாபி அந்நியோன்யத்தோடு பழகிய நாடுகளின் துணையுடனே கொல்லப்பட்டார்.  

மேற்குறித்த உதாரணங்கள், பூகோள அரசியலிலே எதுவும், எக்கணமும் நடக்கும் என்பதை எடுத்துக் காட்டுகின்றன. அடுத்த பத்தியிலே, ஈழத்தமிழர்களின் சாதகமான எதிர்காலத்திற்கு ஏற்றவகையில் நிகழக் கூடிய மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வோம்.

நன்றி -புதினப்பலகை